Pages

Monday, May 31, 2010

பல்லிக்கூடம்



      நண்பர்களே, இன்று நம் பல்லிக்கூடத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் நம் இளம் மாணவனுக்கு நாம் அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளிப்போமாக.

      பல்லி ஆசிரியர் சொல்லி முடித்ததும், ஆங்காங்கிருந்த உறவினர்களும் நண்பர்களும் ஒரே நேரத்தில் டக் டக் என்று ஒலி எழுப்பினர்.

      ஆசிரியர் மாணவனை அருகில் அன்போடு அழைத்துப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார்.

      தம்பி, நீ இன்று தான் முதல் முதலாக வெளி உலகிற்கு வந்திருக்கிறாய். இந்த உலகத்தைப் பற்றியும் சமூகத்தில் நமக்குள்ள கடமைகள் பற்றியும் நீ தெரிந்து கொள்வது அவசியம்,.

      இதோ பார்த்தாயா, பெரிதாக, பிரகாசமாக இருக்கிறது பார், இது தான் சூரியன். இது இப்போது தான் மறைவிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இந்த இடத்திற்குக் கிழக்கு என்று பெயர். எதிர்ப்பக்கம் மேற்கு. வலது பக்கம் தெற்கு, இடது பக்கம் வடக்கு. இந்த சூரியன் வர வர மேலே போகும், மறுபடியும் மேற்கில் இறங்கி மறைந்துவிடும். நாளை மறுபடியும் கிழக்கில் தோன்றும். இது ஒரு நாள். ஒவ்வொரு நாளுக்கும் பெயர் உண்டு. இன்று ஞாயிறு. நாளை திங்கள். அடுத்து செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று நாட்கள் வரிசையாக வரும். பிறகு மறுபடியும் ஞாயிறில் ஆரம்பிக்கும். இதை எல்லாம் நீ இன்றே நன்றாக மனப்பாடம் செய்து கொண்டால் தான் சமூகத்தில் உன் கடமையை நன்றாகச் செய்ய முடியும்.

      என் கடமை என்ன, சார்?”

      நாம் மனி்த சமூகத்தோடு சேர்ந்து தான் வாழவேண்டி இருக்கிறது. மனிதர்களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளைத் தெரிந்து கொள்ளும் சக்தியைக் கடவுள் நமக்குத் தான் கொடுத்திருக்கிறான். அதை அவர்களுக்கு எவ்வகையிலாவது தெரிவிப்பது தான் நம் கடமை.

      இதோ நிற்கிறானே இந்த மனிதன், இவன் முகத்தைப் பார். இவனுக்குத் தன லாபம் வரப்போகிறதென்று உனக்குத் தெரிகிறது அல்லவா? இதை அவனுக்கு முன் கூட்டியே தெரிவித்தால் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவான்!”

                “அதை எப்படித் தெரிவிப்பது? அவனுக்கு நம் மொழி தெரியுமா?”

      கவலைப்பட வேண்டாம். கிழமையையும் திசையையும் வைத்து அவன் நாம் சொல்வதைப் புரிந்து கொள்வான்.      

      இன்று ஞாயிறு அல்லவா? இந்த மனிதனுக்கு வடக்குத் திசையில் போய் இருந்துகொண்டு டக் டக் என்று ஒலி எழுப்பு. அவன் பஞ்சாங்கத்தைப் பார்த்து தனக்குத் தனலாபம் வரப்போகிறதென்று தெரிந்து கொள்வான்.

      சார், ஒரு சந்தேகம். இப்பொழுது இங்கு இன்னொருவர் வந்து விட்டார். நான் வடக்குத் திசையில் போய் நின்று ஒலி எழுப்பினால் அந்த இரண்டாவது மனிதரும் தனக்குப் பணம் வரப்போகிறதென்று தவறாக நினைத்து விடுவாரே?”

      அதற்காகத் தான் கடவுள் இன்னொரு வழி ஏற்படுத்தி இருக்கிறார். யாருக்குத் தனலாபமோ அவனுடைய கீழ் உதட்டில் போய் நீ விழுந்துவிடவேண்டும். இப்பொழுது சந்தேகம் வரவே வராது. அதற்காக நீ குறி பார்த்துச் சரியான இடத்தில் விழுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

      உதட்டில் விழுந்தால் அவன் என்னை விழுங்கி விடமாட்டானா?”

                “மாட்டான். மனிதர்கள் நம்மைக் கண்டு பயப்படுவார்கள். நீ உதட்டில் விழுந்த அதே கணத்தில் அவன் பதறி அடித்துக் கொண்டு உன்னைக் கீழே தள்ளிவிடுவான். நீ அவர்கள் சாப்பிடும் உணவில் விழுந்ததாகச் சந்தேகம் வந்தால் போதும், உணவைக் கீழே கொட்டி விடுவான்.  

                “சரி சார்.

      நல்லது, இன்றைக்குப் பாடம் போதும். நீ நாளைக்கு வா. எந்தெந்தப் பலன்களுக்கு எந்தந்தத் திசையில் எந்தெந்தக் கிழமைகளில் சத்தம் போடவேண்டும் என்றும் எங்கெங்கே விழவேண்டும் என்றும் சொல்லித் தருகிறேன்.

      வணக்கம் குருவே, போய் வருகிறேன்.
                

Sunday, May 30, 2010

திருவாசகத் தேன்- நான் கெட்டவா பாடி



எப்படி இருக்கிறது என் வீடு?’
                ‘மிக அருமையாக இருக்கிறது. யார் இதற்குப் பிளான் போட்டது?’
நான் தான் போட்டேன்.
இது நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கட்டிய வீடு. இதில் என் இஷ்டம் போல் நடக்கக் கூடியவர்கள் மட்டுமே இருக்கலாம். மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை
நான் மட்டும் அந்த இடத்தில் இல்லை என்றால், அங்கு பெரிய சண்டை ஏற்பட்டு கொலையே நடந்திருக்கும். நான் சமாதானம் செய்ததால் அமைதி ஏற்பட்டது.
நான் என் திறமையினால் உழைத்தேன், சௌகரியமாக இருக்கிறேன். நான் ஏன் என் சகோதரனுக்கு உதவி செய்யவேண்டும். வேண்டுமானால் அவனும் உழைக்கட்டுமே. அவனை யார் தடுக்கிறார்கள் ?’

      நம்முடைய வாழ்க்கையில் இந்த நான் எப்படி எல்லாம் வேலை செய்கிறது ! நம் ஒவ்வொருவரிடமும் இந்த அஹங்காரம் இருக்கிறது. இது இல்லாதவர் இல்லை. இந்த நான் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியவன் இறைவன் தான். யான், எனது என்று அவரவரைக் கூத்தாட்டுகின்ற உன்னை எப்படி வாழ்த்துவேன் என்று இறைவனைக் கேட்கிறார் மணிவாசகர்.    

      நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் இருக்கிறான். அதனால் நமக்கு நானே இறைவன் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்) என்று சொன்ன வேதம் தத்வமஸி (நீயும் அதுவே) என்றும் சொல்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.  

இது இறைவனின் திருவிளையாடல். நம் கண்களை, மாயையால் கட்டிப் போட்டு, எல்லாப் பொருள்களிலும் இறைவன் இருப்பதைக் காண முடியாதபடி செய்திருக்கிறான். நாம் நமது முயற்சியால், இந்த மாயையிலிருந்து விடுபட்டு, இந்த அஹங்காரத்தை விட்டு, எப்பொழுது எல்லாவற்றையும் இறைவனாகப் பார்க்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு முக்தி.

சிஷ்யன் கேட்டான், குருவே, நான் தங்களிடம் நீண்ட நாட்களாகப் பணி புரிந்து வந்திருக்கிறேன். நான் நற்கதி அடையுமாறு உபதேசம் செய்யமாட்டீர்களா ?

குரு சொன்னார், நான் செத்த பிறகு  தான்  உனக்கு உபதேசம்.’

ஐயா, தாங்கள் இறந்த பிறகு, எனக்கு யார் உபதேசம் செய்வார்கள் ?’
உன் குரு இறந்த பிறகு அல்ல, உன்னிடமுள்ள நான் என்னும் அஹங்காரம் இறந்தால் தான் உபதேசம் பெறும் தகுதியை நீ அடைவாய்.’

இறைவன் எப்படிப்பட்டவன் ?

வான், மாருதம், அழல், நீர், மண் என்ற பஞ்ச பூதங்களும் தன் நிலை மாறிக் கெட்டாலும் கெடலாம். ஆனால் இறைவன் தன் நிலை கெடமாட்டான்.

நான் எப்படிப் பட்டவன்?

     நான் என்னும் எண்ணம் எளிதில் அழியாதது. முதுமை வர வர உடல் உறுப்புகள் தன் செயல் திறமையை இழக்கும் ஊன் கெடும். உயிர் உடலை விட்டு வெளிக் கிளம்ப நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். உயிர் கெடும். வெட்கம், மானம், ரோஷம் போன்ற உணர்வுகள் விடைபெற்றுக் கொள்ளும். உணர்வு கெடும். இளம் வயது முதல் நம்முடைய அனுபவங்களைச் சுமந்து வந்திருக்கிற உள்ளம் தன் நினைவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும். உள்ளம் போகும். அது வரையில் இந்த அஹங்காரம் போகாது. கடைசியில் தான் அது போகும்.

எல்லாம் போனபிறகு நான் போனால் என்ன, போகாவிட்டால் என்ன ?

வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டல் இன்றிச் சலிப்பு அறியாத் தன்மையனுக்கு
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ

நாம் நன்றாக இருக்கும்போதே நான் என்னும் உணர்வை மறந்து வாழப் பழகிக் கொண்டோமானால், நமக்கு முத்தி எளிது.

அதற்கு என்ன வழி ?

மணிவாசகர் சொல்வதை மீண்டும் கவனிப்போம். அவன் சலிப்பறியாத் தன்மையன். அதாவது அசைதல் இல்லாதவன்.

ஒரு பந்து, அறையின் கிழக்கு மூலையில் உள்ளது. அது மேற்கு மூலையில் இல்லை. எனவே அது கிழக்கிலிருந்து மேற்கே அசைய முடியும்.

காற்று எங்கும் இருந்தாலும் வெவ்வேறு வகையான அழுத்தத்தோடு இருப்பதால் அசைகிறது.

எல்லா இடத்திலும் ஒரே வகையான தன்மையோடு நிரம்பி இருக்கும் இறைவன் எப்படி அசைய முடியும் ?

அவன் இல்லாத இடம் இல்லை என்றால், அவன் என்னிடத்தில் மட்டுமல்லாமல், என்னைச் சுற்றி உள்ள எல்லா மனிதரிடத்தும், எல்லாப் பிராணிகளிடத்தும், எல்லாப் பொருள்களிடத்தும் இருக்கிறான். இதை நாம் உணர்ந்து கொண்டு விட்டால் நம்முடைய அஹங்காரம் அழியும்.

நம்முடைய செயல்களும் எதிராளியின் செயல்களும் எல்லாச் செயல்களுமே இறைவனின் செயல்களன்றி வேறு இல்லை என்பதை உணர்ந்தால் உள்ளத்தில் பொறாமை, கோபம், பகைமை, பயம், வருத்தம் ஆகிய எந்தத் தீவினையும் இரா. என்றும் இன்பமே.

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்ற மணிவாசகத்தை நெஞ்சில் இருத்தி நல்லது நடந்தாலும் தீது நடந்தாலும் எல்லாம் அவன் செயல், இது நான் செய்தது அல்ல என்று எப்பொழுதும் நினைவுபடுத்திக் கொண்டிருப்போமாக. 

அறத்தாறு

     
      அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
      பொறுத்தானோடு ஊர்ந்தானிடை       என்றார் வள்ளுவர்.

      தர்மத்தின் விளைவு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நீ வேறு எங்கும் போக வேண்டாம். இதோ பார் ஒருவன் சிவிகையில் போகிறான். இன்னொருவன் அதைச் சுமந்து செல்கிறான். இதிலிருந்து தெரிந்து கொள். தர்மம் செய்தவன் சிவிகை ஊர்கிறான், செய்யாதவன் சுமக்கிறான் என்று இக்குறளுக்குப் பொருள் சொல்வார்கள்.

      சற்றே சிந்தியுங்கள். ஒரு ஊரில் சிவிகை சுமப்பவர்களே இல்லை என்றால், அங்கு ஊர்பவனும் இல்லாது போகிறான். இது போல ஒரு ஊரில் சிவிகையில் ஊர்ந்து செல்வதற்கு விருப்பமுள்ளோரே இல்லை என்றால் சுமப்போரும் இல்லாது போகின்றனர்.

      இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்று நலமாக வாழ மற்றொன்று அவசியம்.

      பிச்சை எடுப்போர் இல்லை எனின் பிச்சை இடுவாரும் இல்லை. இடுவார் இல்லை எனின் ஏற்போரும் இல்லை.

      குற்ற வாளிகள் இல்லை எனில்  காவல் துறைக்கு வேலை இல்லை. காவல் துறை இல்லை எனின் குற்றங்களும் இல்லை. (நம்புவதற்குக் கடினமாக இருக்கும். காவல் துறை மிகுந்த நகரங்களில் தான் குற்றங்களும் மிகுதி. காவல்துறை இல்லாத கிராமங்களில் குற்றங்களும் குறைவு.)

      காட்டு விலங்குகளில் சில வேட்டை ஆடுபவை, சில வேட்டையாடப்படுபவை. உதாரணம் புலி, மான். இதில் மான் இனம் அழிந்தால் உணவின்றிப் புலி இனம் அழியும். புலி இனம் இன்றேல் மானினம் அழியும். எப்படி? புலி இன்றேல் மானினம் கட்டுக்கடங்காமல் பெருகிக் காட்டை அழித்து விடும். அவை அழிக்கும் வேகத்திற்குக் காடு வளர்வதில்லை. எனவே உணவின்றி மான் இனமே அழிந்துவிடும்.

      இவை ஒன்றுக் கொன்று பகை என்று நாம் கருதுகிறோம். உண்மையில் ஒன்று உயிர் வாழ மற்றொன்று உதவுகிறது. பகைமை மாயத் தோற்றமே. இதை விளக்கும் ஒரு கதை உள்ளது.

      நக்கீரர் சிவனை எதிர்த்து வாதாடிய கதை நாம் அறிவோம். சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதனால் வெப்பு நோய்க்கு ஆளான நக்கீரர் தன் நோய் நீங்க இறைவனை வேண்டித் தல யாத்திரை செல்லும் வழியில் ஒருநாள் ஒரு குளத்தில் நீராடித் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஒரு அரச மரத்திலிருந்து ஒரு பழுத்த இலை கீழே விழுந்தது. அது ஒரு பாதி கரையிலும் மறுபாதி தண்ணீரிலுமாக விழுந்தது. நீரில் விழுந்த பகுதி மீனாகவும் மற்றது பறவையாகவும் மாறியது. இரண்டு உடல்களும் ஒட்டி இருந்தன. பறவை கரையை நோக்கி இழுக்க, மீன் நீருக்குள் இழுக்க இரண்டுக்கும நடந்த போராட்ட அமளியில் நக்கீரரின் தியானம் கலைந்தது. அதனால் அவர் ஒரு பூதத்திடம் சிறைப்பட்டதும் திருமுருகாற்றுப்படை பாடி முருகன் அருள் பெற்று விடுதலை பெற்றதும் கதையின் பின் பகுதி. நாம் இந்தப் பறவை மீன் போராட்டத்தைக் கவனிப்போம்.

      பறவை, மீன், இரு பொருளாக நமக்குத் தோன்றினாலும், அதன் மூலத்தைக் கவனித்தால் அது ஒரே இலை என்பது தெரிகிறது. நாம் போராட்டத்தைத் தான் கவனிக்கிறோம். அடிப்படையில் அமைந்துள்ள ஒருமைப்பாட்டைக் கவனிப்பதில்லை.

      இப்படித்தான் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு அமைப்பிலும், இவ்வுலகைப் படைத்துக் காக்கும் மகா சக்தி, இரண்டாகப் பிரிந்து ஒரு போராட்ட மாயையைத் தோற்றுவிக்கிறது. முதலாளி தொழிலாளி என்றும் புலி மான் என்றும் சிவிகை சுமப்பவன் ஊர்பவன் என்றும் இரண்டாகப் பிரிந்து ஒன்றை ஒன்று பகைப்பது போலத் தோற்றம் காட்டி ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் விந்தையைக் கவனியுங்கள். இது தான் உலக நியதி.

      பாரதி கூறுகிறார்- அர்ஜுனன் பக்கத்தில் இருந்து அவனுக்குத் தேரோட்டியது மட்டும் கண்ணன் அல்ல. எதிர்த் தரப்பில் நின்று துரியோதனன் என்ற பெயரில் போரிட்டதும் கண்ணனே.

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர் போல வந்தானுமவன்
நேருக் கருச்சனன் தேரிற் கசை கொண்டு நின்றதும் கண்ணனன்றோ.

      இந்த உலக நியதியைத்தான் வள்ளுவர் அறம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

      இப்பொழுது மீண்டும் அந்தக் குறளைப் பார்ப்போம். அறத்தின் தன்மை உலக நியதி - எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள நீ எங்கும் போக வேண்டாம். இதோ பார் ஒருவன் சிவிகை ஊர்வதையும் மற்றவன் சிவிகை பொறுப்பதையும். இதிலிருந்தே தெரிந்துகொள். உலகை ஆளும் பேராற்றல் தான் இதுபோன்று ஒவ்வொரு அமைப்பிலும் இரண்டாகப் பிரிந்து பகைமைத் தோற்றம் காட்டி ஆனால் உண்மையில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இந்த உண்மையைத் தெரிந்துகொள் என்கிறார் வள்ளுவர்.

மனிதனின் எதிரிகள்


                                                           
      மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடியில் ஒரு வாசகம் நையப்புடை என்பது. அந்தச் சொற்களில் தான் என்ன வேகம். அவற்றில் பாரதியின் முழுக் கோபமும் வெளிப்படுகிறது.
           
      பாரதி என்ன வன்முறையாளரா? அன்பு இல்லாத வன்நெஞ்சரா? இல்லை, இல்லை. கொல்ல வரும் புலியையும் அன்போடு சிந்தையில் போற்றச் சொன்னவர் அல்லவா அவர்? இப்பொழுது ஏன் முரண்பாடாகக் கூறுகிறார்?

            பாரதியை முழுமையாகப் படித்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரிய வரும். புலியினும் கொடிதான பகைவர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களைத் தான் அவர் நையப்புடைக்கச் சொல்கிறார். யார் அந்தப் பகைவர்கள்? ஆத்திசூடியிலேயே அந்தப் பட்டியல் வருகிறது. அச்சம், இளைப்பு, மௌட்டியம், ஓய்தல் இவை தாம் அவை.

            பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள இத் தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார். பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,

            பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
            பயம் கொள்ளலாகாது பாப்பா,
            மோதி மிதித்து விடு பாப்பா அவர்
            முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.

            அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
            அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

            நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று மார் தட்டிய நாவுக்கரசர் வழி நின்று நம் கவியரசரும்
           
      காலா என் காலருகே வாடா
            சற்றே உனை மிதிக்கிறேன்
என்றும்
            யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே
            உன்றன் போர்க்கஞ்சுவேனோ பொடியாக்குவேன் உன்னை
என்றும் கூறுகிறார். சாவுக்கு மட்டுமன்றி வேறு எதற்கும் அஞ்சக் கூடாது என்பது அவரது கருத்து.

            தொன்மைக்கு அஞ்சேல்
            கீழோர்க்கு அஞ்சேல்
            தீயோர்க்கு அஞ்சேல்
            பேய்களுக்கு அஞ்சேல்

      தருமத்திற்கும் நீதிக்கும் பயப்படவேண்டும், தலை வணங்க வேண்டும் என்ற முன்னோர் கருத்தை வலியுறுத்தும்போது கூட நீதி நூல் பயில், நீதி தவறேல் என்பாரே அன்றி பயப்படு, தலை வணங்கு என்ற சொற்களைத் தவறியும் பயன்படுத்தவில்லை.
           
      ஆறுவதுசினம், நயம்படஉரைஔவையின் இந்த உபதேசங்களிலிருந்து மாறுபடுகிறார் பாரதி. சினத்தை முன்னே வென்றிடுவீர் என்று அவர் சொன்னாலும், தீமையைக் கண்டால் எல்லையற்ற கோபம் பொங்கி வரவேண்டும், அப்படி வராதவன் நாயினும் கீழானவன் என்பது அவர் கருத்து.

            ரௌத்திரம் பழகு
            வெடிப்புறப் பேசு
            கொடுமையை எதிர்த்து நில்
            சீறுவார்ச் சீறு
என்ற வாசகங்களாலும்

            தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
            நாயென வாழ்பவன் நமரில் இங்கு உளனா
என்ற அடிகளாலும் தீமையை எதிர்த்துப் போராட ஊக்கம் கொடுக்கிறார். இத்தகைய முயற்சியில் சாவது நேரினும் அஞ்சாமல் முனையிலே முகத்து நிற்கும்படி அவர் கூறியது இளைஞர்களுக்கு எவ்வளவு எழுச்சி ஊட்டக்கூடியது.

            நையப் புடைத்து ஒழிக்க வேண்டியவற்றில் அடுத்து வருவது இளைப்பு.

            உடலினை உறுதி செய்
            ஊண் மிக விரும்பு
            இளைப்பது இகழ்ச்சி என்றும்

            அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறா உடல் உறுதி வேண்டும் என்றும் அவர் உடலைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நோயாளியைக் கண்டால் அவருக்கு மட்டற்ற கோபம் வருகிறது. வலிமையற்ற தோளினானை, மார்பிலே ஒடுங்கினானை, பொலிவிலா முகத்தினானை, பொறியிழந்த விழியினானை, ஒலியிழந்த குரலினானை, ஒளியிழந்த மேனியானைப் போ போ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி நோய்களற்ற உடலினானை வா வா என்று வரவேற்கிறார். நோயினுக்கு இடம் கொடேல், யௌவனம் காத்தல் செய் என்று அறிவுறுத்திய அவர் தளர்ந்த முதுமைக் கோலத்தோடு தான் வாழக் கூடாது என்று கருதித் தானோ என்னவோ இளமையிலேயே இறந்து விட்டார்.

            அவரது பாடல்களை ஒரு முறை படித்து விட்டாலே யாருக்கும் தாழ்ந்து நடவாமல் நிமிர்ந்து ஏறு போல் நடக்கத் தோன்றுகிறது.

            நொய்ந்தது சாகும் என்ற இயற்கை நியதியை வலியுறுத்துகிறது புதிய ஆத்திசூடி. இதை விளக்கும் வகையில் அவரது வசன கவிதை,

            காற்றுத் தேவன் மெல்லிய தீயை அவித்து விடுவான், வலிய தீயை வளர்ப்பான். எனவே நொய்ந்த உடல், நொய்ந்த உள்ளம் இவற்றை ஒழித்து விட்டு உயிரை வலிமையுற நிறுத்துவோம் வாருங்கள் என்று முழங்குகிறது.

            நமது மூன்றாவது எதிரி மௌட்டியம்-மூடத்தனம். அதில் தான் எத்தனை வகை நம்மிடம் உள்ளன. கஞ்சி குடிப்பதற்கு இல்லாத நிலையில் அதன் காரணம் இவை என்று அறியாமை, வஞ்சனைப் பேய்கள், மந்திரவாதி, சோதிடம் இவற்றை நம்புதல், மூடப் பழக்கங்கள் எனத் தெரிந்தும் முன்னையோர் சொன்னது என்பதால் கண் மூடித்தனமாகப் பின்பற்றுதல், நூலினைப் படித்துணராமல் பொய்மைச் சாத்திரங்களை நம்பி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவீனம்--அப்பப்பா, எத்திசை நோக்கினும் நமது தாழ்வுக்குக் காரணமாக நிற்பது அறியாமையே என்பதை உணர்ந்த அவர் இதை நையப் புடைத்து ஒழிக்கச் சொன்ன வசனங்கள் இவை:-

            சோதிடம் தனை இகழ்
            தொன்மைக்கு அஞ்சேல்
            பிணத்தினைப் போற்றேல்
            புதியன விரும்பு
            மௌட்டியம் தனைக் கொல்
            வேதம் புதிது செய்

            நமது நாலாவது எதிரி சோம்பல்.

            ஓய்தல் ஒழி
            நாளெல்லாம் வினை செய்
            யவனர் போல் முயற்சி கொள்
            கெடுப்பது சோர்வு என்றும்
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா என்றும் தொழிலிலே சோம்பலைப் போல் இழிவில்லை என்றும் கூறிய அவர் ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்களுக்கோர் கணமும் வாழத் தகுதி உண்டோ என்று சாடுகிறார்.

            வாருங்கள், பாரதியுடன் சேர்ந்து பேரிகை கொட்டுவோம்--அச்சம், இளைப்பு, அறியாமை, சோம்பல் என்னும் பகையே, நையப் புடைக்கத் துள்ளி வருகுது வேல், சுற்றி நில்லாதே,போ.
************* ********************************************************************
      இனி மற்றொரு முரண்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

      பாரதி தன் புதிய ஆத்திசூடியில் ஓய்தல் ஒழி, நாளெல்லாம் வினை செய், யவனர் போல் முயற்சி கொள் என்று அறிவுறுத்துகிறார். வேறு பாடல்களிலும் நமக்குத் தொழில் இமைப்பொழுதும சோராமல் இருத்தல் என்று முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் சோம்பேறித்தனத்தை இழித்தும் பேசுகிறார். இத்தகைய கவி அன்பு செய்தல் என்னும் கவிதையில் கூறுவதைக் கேளுங்கள்.


      பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்கிறாரே சோம்பேறித்தனத்துக்கு ஆதரவு தருகிறாரா, இது என்ன முரண்பாடு ?

      முரண்பாடு இல்லை. கடைசி வரியை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.  உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்.

      அன்பு செய்தல் என்றால் என்ன ? பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல் இரண்டும் தான். இரண்டும் ஒன்றல்ல. பின்னது தெய்வத்தை வேண்டுவது மனதால் செய்யப்படும் தொழில்.  பிறர் துயர் தீர்ப்பது என்றால் உடலால் உழைக்கத் தான் வேண்டும். 

      இங்கு தான் பாரதியின் உயர்ந்த உள்ளம் புலனாகின்றது. பிறர் துயர் தீர்ப்பதற்காக உழைக்க வேண்டும், தன் வயிற்றுக்காக உழைக்கத் தேவை இல்லை, உணவு இயற்கை கொடுக்கும் என்கிறார்.

      பாரதி தன் கட்டுரைகள் பலவற்றிலும் மேலை நாட்டினர் ஒன்று கூடிச் சங்கம் அமைத்துப் பொது நன்மைக்குத் தொழில் செய்தல் போல நம்மவர் செய்வதில்லை, அடுத்தவன் அதிகாரம் பெற்று விடப் போகிறானே என்று குழிபறிப்பதிலேயே உள்ளனர் என்று வருத்தப்படுகிறார். ஆத்திசூடியில் கூடித் தொழில் செய் என அறிவுறுத்துகிறார். 

உலகளந்த நாயகி



                ஒன்றென்றிரு   தெய்வம் உண்டென்றிரு என்பது முதுமொழிஅறிவிலிகள் ஆயிரம் தெய்வம் உண்டென்று அலைவர். எப்பெயரிட்டு அழைத்தாலும் அது ஒரே பரம்பொருளையே குறிக்கும் என்பதை ஞானிகள்  பலர் உணர்த்தியுள்ளனர்.    

        ஒரு நாமம்  ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
                திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்று  திருவாசகம் கூறுவதும் இதே கருத்தைத் தான்.
               
        இத்தகைய தெய்வத்தைச் சக்தி என்றும்  முருகன் என்றும் சங்கரன் என்றும் கண்ணன் என்றும் பல  பெயர்களில் நாம் அழைத்துப் புகழ்கிறோம்.வழிபாட்டு முறைகள் பலவும் ஒரே லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன என்ற திடமான அறிவு  இருந்தாலும்  எனக்கு தெய்வத்தை அன்னையாகப் பார்ப்பது தான்  மனதுக்குப் பிடிக்கிறது என்று ராமகிருஷ்ண பரமஹம்சர்  கூறினார். அவரது  அமுத மொழிகளில் தோய்ந்த பாரதியும் பரம்பொருளை  அன்னை பராசக்தி என்று அழைப்பதைப் பெருவழக்காக ஆக்கிக் கொண்டார். அவளது திருவடிகளை இறுகப் பற்றுவது தான் நிலையற்ற இவ்வுலகில்  துயரின்றி வாழ வழி என்று  தன் நெஞ்சுக்குக் கூறுவது போல அவர் நமக்குக் கூறுகிறார். அவ்வாறு சரணம் அடைவதால் நமது குறைகள் தீர்க்கப்படும், தேவைகள் நிறைவு பெறும் என்று அவர் நம்புகிறார். இந்த இடத்தில் குறை என்ற சொல்லுக்கும் தேவை என்ற சொல்லுக்கும் ஒரு நுட்பமான வேறுபாட்டைப் பாரதி காட்டுகிறார்.

                பசியும் பிணியும் தான் மனிதரின் உண்மையான துன்பங்கள் - உண்மையான தேவைகள்.  இவற்றிலிருந்து காக்கச் சொல்லி அவர் பராசக்தியை வேண்டுகிறார். குறை என்பது இந்தப் பொருள் இல்லையே என்று மனதால் ஏங்குவது. இது மனக்குறையே அன்றி உண்மையான தேவை அல்ல. பொன் வேண்டும், உயர்வு வேண்டும், புகழ் வேண்டும் என்று விரும்புவது மனதின் அகங்காரத்தின் விளைவு. மற்றவரை விட நான் மேலானவன் என்று காட்டிக் கொள்வதற்குத் தான் நாம் பெரிய மாட மாளிகையும், உயர்ந்த பதவியும், ஏவல் செய்யப் பணியாளர்களும், உலகறியும் வகையில் உலவி வரும் புகழும் விரும்புகிறோம். இவை குறைகள். தேவைகளோ துன்பங்களோ அல்ல. பாரதி சக்தியிடம் என் குறைகளை நிறைவு செய் என்று கேட்கவில்லை. அவற்றைத் தீர்க்கச் சொல்லி, அதாவது தீர்த்துக் கட்டிவிடுமாறு, ஒழித்துக் கட்டுமாறு, வேண்டுகிறார். பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்று வேறொரு பாடலில் கூறுகிறார். பாரதி வேண்டியது ஒரே ஒரு  பெருமையைத் தான். சக்தி தாசன் என்று பெயர் பெற வேண்டும்  என்ற ஒரு பெருமையைத் தான் அவர் விரும்புகிறார். அப் பெருமை பக்தியினால் வருவது. அகந்தை, பொன்னாசை, பதவி ஆசை, புகழ் ஆசை எல்லாம் தீய நெறிகளில் சேர்த்துவிடும். ஆனால் பக்தியோ உத்தம நன்னெறிகளிலே சேர்த்துவிடும். எனவே உலகளந்த நாயகியாகிய  அம்மகாசக்தியின் தாளை அனவரதமும் நினைப்பாயாக என்று அவர் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறார்.

சக்தி என்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்   
சங்கரன் என்று உரைத்திடுவோம் கண்ணன் என்போம்
நித்தியம் இங்கு அவள் சரணே நிலை என்று எண்ணி   
நினக்குள்ள குறைகள் எல்லாம் தீர்க்கச் சொல்லி
பக்தியினால் பெருமை எல்லாம் கொடுக்கச் சொல்லி    
பசி பிணிகள் இல்லாமல் காக்கச் சொல்லி
உத்தம  நன்ற்னறிகளிலே சேர்க்கச் சொல்லி             
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே.

सर्वं ब्रह्म मयम्



तमिळ भाषायाः सुप्रसिद्ध कवेः श्री सुब्रह्मण्य भारती महाशयस्य कवितायाः एकस्याः मया कृतं अनुवादनं अत्र दीयते। दोषाः भवेयुः, क्षम्यताम्, सम्शोधनं क्रियतां च।

कथय, हरि नाम पुरुषः कुत्रास्ति, कथय माम् इति अगर्जत् हिरण्यासुरः। सत्पुत्रः प्रत्यवदत्, स्तम्भे अस्ति नारायणः, तृणे अपि सः अस्तिइति। तादृशं वस्तु नास्ति यस्मिऩ् सर्वशक्तिमाऩ् ईश्वरो न विद्यते, यस्मिऩ् तस्य महाशक्तिः न आविर्भूता। दुःखं नास्ति, खेदो नास्ति, नास्ति व्यथा कदापि च, मन्यसे यदि सर्वत्र व्याप्तो नारायणो हरिः।

श्रुणु रे शिष्य, गर्दभं कंचित् दृष्ट्वा, नीचसूकरं वा वृच्छिकं वा, शिरस्योपरि हस्ताभ्यां अंजलिं कुर्यात्। शंकर, शंकर इति उक्त्वा तान् पादाऩ् नमेत् च। सर्वेषां समूहे अस्ति भगवाऩ्। प्रज्ञानं ब्रह्म इति ऋषयः वदन्ति, क्षुद्रा मृत्तिका अपि तदेव इति वदन्ति वेदाः। बहुश्रुतः गुरुः ब्रह्म इति कथयन्ति शिष्ठाः, विद्याहीनः चण्डालः अपि शिव इति घोषयन्ति वेदाः।

यदि प्राणिनः सर्वे ब्रह्म इति वचनं सत्यं अस्ति चेत्, तवान्तिके या भार्या अस्ति, यो शिशुः वर्तते, ते अपि मूर्तिमान् ब्रह्म एव। जीवाः सर्वे ईश्वर एव, न अन्यथा। न केवलं चेतनावन्तः, अपितु सूर्यः चन्द्रः नक्षत्राः मेघाः च विग्रहवान् ईश्वरः। एषा लेखनी भगवान्, एते अक्षराः अपि।

Wednesday, May 26, 2010

சோதிடம் தனை இகழ்

சோதிடரை நாடுவோர் யார்?

பிரச்சினை உள்ளவர் தாம் சோதிடரையும் சோதிடத்தையும் நாடிச் செல்கின்றனர். பிரச்சினை இல்லாதவர் யார்? எல்லோருக்கும் அவரவருக்கு ஏற்றபடி ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்கிறது. ஆனால் எல்லோரும் சோதிடரை நாடுவது இல்லையே. பிரச்சினைகளுக்கு விடை நேரடியாகத் தேடத் தெரியாத மன வலிமை குறைந்தவர் தாம் சோதிடரை நாடுகின்றனர். நம்முடைய துன்பத்தை யாராவது தீர்த்து வைக்க மாட்டார்களா என்று ஏங்குபவர்கள் அவர்கள். அது மட்டுமல்ல, தங்கள் துன்பங்களுக்கு பிறர் மேல் பழியைப்போடும் மனோபாவம் உடையவர்கள்.

சோதிடரிடம் போனவுடனே, அவர் எந்த முறையைப் பின்பற்றுபவரானாலும் சரி, உங்களுக்கு இப்பொழுது மனதில் குழப்பமும் கவலையுமாக இருக்குமே என்று கேட்பார். ஆகா, நம் மனத்தை எப்படிப் படம் பிடித்தாற் போலச் சொல்கிறார் என்று நம் நண்பர் வியந்து சோதிடரிடம் சரண்டர் ஆகிவிடுவார்.

உங்கள் துன்பங்களுக்குக் காரணம் இந்தச் சனியும் செவ்வாயும் குருவும் என்று ஏதோ சொல்வார். நம்முடைய துன்பத்துக்குக் காரணமான வில்லனைக் கண்டுபிடித்தாயிற்று என்று இவர் சமாதானம் அடைவார்.

சோதிடமும் ஆன்மீகமும்

ஆன்மிகத் தொலைக் காட்சிகளிலும், ஆன்மிகப் பத்திரிகைகளிலும் சோதிடப் பகுதி தவறாமல் இடம் பெறுகிறது. ஆன்மிக வாதிகள், அதாவது கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. சோதிடத்துக்குத் தனித்து நிற்கத் தெம்பு இல்லாததால் ஆன்மிகத்தின் தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படிச் சிலர் சொல்லக் கூடும்- மனவலிமை இல்லாதவர்கள் தான் கடவுளை நம்புகிறார்கள், சோதிடத்தையும் நம்புகிறார்கள். இதுவும் உண்மை அல்ல. கடவுளை நம்புபவர்களுக்கு மன வலிமை அதிகரிக்கிறது. திருப்புகழ் படிப்பவர் சிந்தை வலுவாலே ஒருத்தரை மதிப்பதிலை உந்தன் அருளாலே என்று அவர்கள் மன திடத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். பெரிய அருளாளர்கள் எல்லோரும் சோதிடத்தை இகழ்ந்து தான் இருக்கிறார்கள். நாளென் செய்யும் , வினை தான் என் செய்யும், எனை நாடி வந்த கோளென் செய்யும் என்று கொக்கரிக்கிறார் அருணகிரிநாதர். ஞாயிறு முதலான ஒன்பது கோள்களும் அடியார்களுக்கு மிக நல்லவையாக உள்ளன என்று சம்பந்தர் ஆணையிடுகிறார்.

சோதிடத்தை நம்புபவர்களோ இன்று குருவுக்குப் பரிகாரம் செய்தால் நிம்மதி கிடைக்கும் என்று செய்வார்கள். பிரச்சினை தீரவில்லை எனில் இன்னும் பெரிய சோதிடர் யார் என்று தேடிப் போவார்கள். அவர் சனிக் கிரகத்துக்கு வழிபாடு செய்யச் சொன்னால் அதைச் செய்வார்கள். அடுத்த ஆண்டு வேறு பிரச்சினை வந்தால் மீண்டும் சோதிடர் வீட்டுக்கு ஒடுவார்கள். இவ்வாறு அஞ்சி அஞ்சியே வாழ்நாளைக் கழிப்பார்கள்.

ஆலயங்களில் சோதிடத்தின் ஆக்கிரமிப்பு


11 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஆலயங்களில் சோதிடம் ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது. அதற்கு முன் ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு இருந்ததில்லை. பின்னர் ஒவ்வொரு கோவிலாக நவக்கிரகப் பிரதிஷ்டை ஏற்படலாயிற்று. இதனால் முழு முதற் கடவுளின் சிறப்பு மங்கத் தொடங்கியது. இன்னமும் சில பழமையான கோயில்கள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு சோழ அரசனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அவன் மஹாலிங்க சுவாமியைத் தரிசனம் செய்வதற்காகத் திருவிடை மருதூர் சென்றான். பெருமானின் சன்னிதியில் நிற்க இயலாத தீவினை அவனை விட்டு விலகி கோபுர வாயிலில் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. அவன் திரும்பி வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என்பது அதன் எண்ணம். இதை அறிந்த அரசன் கிழக்குக் கோபுர வாயில் வழியாகத் திரும்பாமல் வேறு வழியில் திரும்பிவிட்டான். பிரம்மஹத்தி. இன்னமும் கிழக்குக் கோபுர வாயிலில் காத்துக் கொண்டு இருக்கிறது. இன்றைக்கும் திருவிடைமருதூரில் வழிபடுபவர்கள் கிழக்குக் கோபுரவாயில் வழியாகத் திரும்புவதில்லை. மஹாலிங்க சுவாமிக்கு அவ்வளவு ஏற்றம்.

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு கதை நளன் விஷயமாகச் சொல்லப்படுகிறது. சனியால் (கலியால்) பிடிக்கப்பட்ட நளன், திருநள்ளாறு சென்றான். தர்ப்பாரண்யோசுவரர் சன்னிதியில் நிற்க இயலாத சனி கோபுர வாயிலில் ஒதுங்கிக் கொண்டது. சிவன் அருளால் நளன் கலி தீர்ந்து நலம் பெற்றான்.

ஆனால் இன்று தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னிதியை விட சனி சன்னிதியில்தான் கூட்டம் மிகுதியாக உள்ளது. இங்கு தான் வழிபாடுகள் அதிகம் நடைபெறுகின்றன. கலி தீர்த்த பெருமானை விட கலிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

திருநள்ளாறில் இருப்பது சனியா முருகனா?


நவக்கிரகம் உள்ள கோவில்களில் பொதுவாக சனிக் கிரக விக்கிரகம் மேற்குப் பார்க்கத் தான் நின்று கொண்டிருக்கும். தனியாக சனி விக்கிரகம் இருந்தால் அது கீழ் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் மேற்குப் பார்க்க வைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருநள்ளாறில் உள்ள சனி கிழக்கு நோக்கி உள்ளது.

பொதுவாக, சிவாலயங்களில் கோபுர வாயில் அருகே கிழக்கில் விநாயகரும், மேற்கில் முருகனும் தான் கோஷ்ட தேவதையாக இருப்பது வழக்கம். திருநள்ளாறில் கோபுர வாயில் அருகே கிழக்குப் புறம் விநாயகர் இருக்கிறார். மேற்கில் முருகன் சிலை தானே இருக்க வேண்டும். அந்த விக்கிரகம் தான் இன்று சனி என்ற பெயரில் வணங்கப்படுகிறது.

சனி பகவானுக்கு உரிய காக்கை வாகனம் காணப்படுவதால் அது சனியே என்கின்றனர். ஒரு அடி உயரம் உள்ள சிலையில் வாகனத்தின் தலை ஒரு அங்குலம் தான் இருக்கும். அந்த சிறிய இடைவெளியில் காக்கை போல் தெரியாமல், மயிலாக வேறுபட்டுத் தெரியவேண்டும் என்ற சிரத்தையுடன் சிற்பம் செதுக்குவதற்கு மிக அதிகமான திறமை வேண்டும். முருகனை வடித்த அந்தச் சிற்பிக்கு அவ்வளவு திறமை இல்லாததால் அது காக்கை போல் தோற்றமளிக்க முருகன் சனியாக மாற்றப்பட்டார்.

இந்த குருவுக்குப் பதிலாக அந்த குரு

குரு என்ற வடசொல்லுக்கு பெரிய என்பது பொருள். கௌரவம் என்ற சொல் அதிலிருந்து தோன்றியது, பெருமை என்னும் பொருள் உடையது. கோள்களில் அளவில் பெரியதாக இருப்பதால் வியாழன் குரு எனப்படுகிறது.

வயதில் பெரிய தாய் தந்தையரைக் குரு என அழைப்பது இன்றைக்கும் வட மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது. அறிவில் மூத்த ஆசிரியரும் குரு எனப்படுகிறார்.

சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு ஆசிரியராக (குருவாக) இருந்து உபதேசித்த கோலம் தக்ஷிணாமூர்த்தி எனப்படுகிறது. வியாழன் கிரகத்துக்கும் தக்ஷணாமூர்த்திக்கும் தொடர்பு இந்த குரு என்ற சொல் மூலம் தான்.

வியாழன் கிரகம் தரும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற விரும்புவோர் இன்று தக்ஷிணாமூர்த்திக்கு வழிபாடு செய்வது எந்த வகையில் பொருந்தும் என்பது தெரியவில்லை.

சிவபெருமான் முழுமுதல் கடவுள். எனவே கோள்களால் ஏற்படும் துன்பத்தை நீக்க வல்லவர் என்று சொன்னால் சனிப் பெயர்ச்சிக்கும் ஆலமர் கடவுளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டுமே. அவ்வாறு செய்வது இல்லை.

பெயர் ஒற்றுமையை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வாறு வழிபாடு ஆற்றுதல் எப்படி இருக்கிறது என்றால் வெங்கடராமன் என்ற பெயருடைய ஒருவர் நோபல் பரிசு வாங்கினால் நம் ஊரில் உள்ள ஒரு வெங்கடராமனுக்குப் பாராட்டு விழா நடத்துவது போல இருக்கிறது.

சனி என்று சொல்லட்டும், குரு என்று சொல்லட்டும். எந்தப் பெயரைச் சொல்லியாவது மக்கள் கோவிலுக்கு வருகிறார்களே, கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களே என்று திருப்தி அடைகிறார்கள் நம் மதத் தலைவர்கள்.

சோதிடமும் வேதமும்

பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் இன்று பரிகாரத் தலங்களாக மாறி உள்ளன. பவரோக வைத்தியநாதப் பெருமாளை விட அங்குள்ள செவ்வாய் அதிக சக்தி உள்ளவர் என்றும் வெண்காட்டுறை ஈசனை விட அங்குள்ள புதன் எளிதில் அருள் புரியக் கூடியவர் என்றும் மக்கள் கருதும் நிலை வந்துள்ளது. இவ்வாறு, சோதிடம் கோவில்களில் உட்புகுந்து முழுமுதற் கடவுளுக்கு உள்ள பெருமையை விட அதிகப் பெருமையைக் கோள்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

தனித்து நிற்கச் சக்தியில்லாத சோதிடம் வேதத்தையும் தனக்குத் துணை சேர்த்துக் கொண்டு இது வேதத்தின் ஒரு அங்கம் என்ற மாயையைத் தோற்றுவித்துள்ளது. வேதத்தின் அங்கமாகக் கூறப்படும் ஜ்யோதிஷம் முழுக்க முழுக்க வானியலே. வேத கால ரிஷிகள் வானத்தை உற்று நோக்கினர். அங்கு காணப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களுக்கும் கோள்களுக்கும் பெயரிட்டனர். கோள்களின் அசைவைக் கணக்கிட்டனர். சடங்குகள் செய்வதற்கு உரிய நாட்களைத் தேர்ந்தெடுக்க வகை செய்யும் அதில் வருங்காலம் உரைக்கும் சோதிடம் இடம் பெறவில்லை.

கோள்களின் அமைப்பைக் கொண்டு, வருவது உரைக்கும் சோதிட முறை கிரேக்கத்திலிருந்து வந்தது. வேதங்கள், அதன் அங்கங்கள் ஏற்பட்ட காலத்திற்கு மிகப் பிந்திய காலத்தது இது.

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோளின் பெயரை இட்டு அத்தகைய ஏழு நாட்கள் கொண்ட தொகுதியை வாரம் என்று அழைக்கும் முறை வேத காலத்தில் இல்லை. தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் எதிலும் இந்த வார நாட்கள் பற்றிய குறிப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாதக் கணக்குகளும் ஆண்டுக் கணக்குகளும் மதத்திற்கு மதம் வேறுபடுகின்றன. நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் வாரக்கணக்கு மட்டும் எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதிலிருந்து இது உலகளாவிய வாணிகம், போக்குவரத்து ஏற்பட்ட பின் பரவி இருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

நாடி சோதிடம்

பிறப்பு நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஜாதக முறைச் சோதிடத்தையாவது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளலாம். நாடி ஜோஸ்யம் எனப்படுவது முற்றிலும் நமது நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஏமாற்று வித்தை. இது ஏதோ முக்காலமும் உணர்ந்த ரிஷிகளின் வாக்கு என்று நம்புபவர்கள் இதில் காசையும் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பது பரிதாபகரமானது.

உலகத்திலுள்ள அத்தனை மக்களின் ஜாதகமும் தன்னிடம் இருப்பதாக நாடி ஜோதிடர் கூறுகிறார். அது சாத்தியமல்ல. உலகில் இப்பொழுது 700 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவருக்கு ஒரு ஓலை என்றால் கூட அவரது சிறிய வீடு அல்லது அலுவலகத்திற்குள் இவ்வளவு ஓலைகளை வைத்திருப்பது இயலாதது. ஒரே ஊரில் பல நபர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் பல வேறு பெயர்களில் நாடிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இத்தகைய ஆயிரக் கணக்கான சோதிடர்கள் ஒவ்வொருவரிடமும் இத்தனை கோடிக்கணக்கான ஓலைகள் இருப்பது என்பது சாத்தியமே இல்லை. ஒரு தந்தைக்கு நான்கு மகன் இருந்தால் தந்தைக்குப் பிறகு நான்கு பேரும் தனித்தனியே தொழில் நடத்துவதையும் பார்க்கிறோம். அத்தனை ஓலைகளையும் பிரதி எடுப்பது என்பது நடவாத செயல்.

நாடி சோதிடரிடம் சென்றால் அவர் நம்மைப் பற்றிய பாதி விபரங்களை நம்மிடமிருந்தே தெரிந்து கொண்டு விடுகிறார். பிறகு அவர் சேர்க்க வேண்டிய சொந்தச் சரக்கு சிறிதளவே.

நாடி சோதிடர் தேடி எடுக்கும் நம்முடைய ஓலையில் ஏதோ கிறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் படிப்பதற்கு நம்மால் முடியாது. அவரே தான் படித்துச் சொல்ல வேண்டும். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறதே, நாம் சொல்லாத விபரங்களையும் துல்லியமாகச் சொல்கிறாரே என்று சிலர் கேட்கலாம். அதற்கு விடை பின்னால் வரும்.

ஒருவர் நாடி சோதிடரிடம் போகிறார். தனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேட்கிறார். சோதிடர் ஒரு ஓலையைக் கொண்டு வந்து வாசித்து இன்னும் 6 மாதங்களில் நடக்கும் என்று நம்பிக்கை தருகிறார். இது எல்லோருக்கும் பலிப்பதில்லை. மீண்டும் சோதிடரிடம் போனால் உங்களுடைய பூர்வ ஜன்மப் பாவங்கள் தடுக்கின்றன போலும், பூர்வ ஜன்மக் காண்டத்தைத் தேடி எடுக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தனியாகக் கட்டணம் பெற்றுக் கொண்டு ஏதோ சொல்லி அனுப்புகிறார். அதுவும் பலிக்கவில்லை என்று போனால் சர்ப்ப தோஷ சாந்தி செய்ய வேண்டும் அது இது என்று சொல்லிக் கணிசமான தொகை கறந்து விடுகிறார். அந்த சாந்திகளைச் செய்தும் பலிக்கவில்லை என்றால் நம் நண்பர் வெறுத்து ஒதுங்கி விடுகிறார். இப்படிப் பல முறை சோதிடர் வீட்டுக்கு நடந்து ஏமாந்தவர்கள் பலர் உண்டு.

எண்ண வாசிப்பு Thought Reading

பிறர் மனதில் தோன்றும் எண்ணங்களை அவர் வாயால் உரைக்காத போதும் தெரிந்து கொள்ளுதல் எண்ண வாசிப்பு எனப்படுகிறது. இத்திறமை நம் எல்லோரிடமும் ஓரளவு இருக்கிறது. நம் எதிரில் இருப்பவர் கோபமாக இருக்கிறாரா, மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பதை அவர் சொல்லாமலேயே தெரிந்து கொண்டு விடுகிறோம். சிலரிடம் இத்திறமை இயற்கையிலேயே மிகுதியாக இருக்கிறது. சிலர் இதைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொ்கின்றனர். இதை வளர்த்துக் கொண்டால் நம் எதிரில் உள்ளவருடைய அனைத்து எண்ணங்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மை போட்டுப் பார்ப்பவர், அனுமார் முதலான தெய்வங்களை உபாசிப்போர், எண் சோதிடர், குறி சொல்வோர், கைரேகை வல்லுநர், ஜாதகம் பார்ப்போர் முதலான எல்லா வகையான சோதிடர்களும் இத்திறமையை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, நாடி சோதிடர்கள் இதை முழுவதுமாகச் சார்ந்திருக்கிறார்கள். அதனால் தான் நாம் போன உடனேயே நமது பெயர், ஊர், நமது உறவினர்களின் பெயர்கள், நமது வீட்டின் அமைப்பு போன்ற விபரங்களைச் சொல்லி நம்மை அசத்துகிறார்கள். அவர்கள் தேடிக் கொண்டு வரும் ஏடு சும்மா பெயருக்குத் தான். அவர்கள் நம் மனதில் உள்ளதை, நமது பிரச்சினையை அப்படியே “புட்டுப் புட்டு” வைக்கிறார்கள்.

நம் மனதில் உள்ளதைத் தான், அதாவது பழைய நிகழ்வுகளைத் தான், அவர்களால் சொல்ல முடியும் என்பதைக் கவனிக்கவும். வருங்காலம் பற்றி அவர்கள் கூறுவது எல்லாம் ஒரு ஊகத்தின் பேரில் தான். அவற்றில் சில பலிக்கலாம், சில பலிக்காமல் போகலாம்.

எண்ண வாசிப்புக் கலையை வளர்த்துக் கொள்வது எப்படி? தெய்வ உபாசனை மூலம் அல்லது ஏதேனும் ஒரு பொருளில் ஆழ்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் இதைப் பெறலாம். ஆனால், வேண்டாம். மற்றவர் எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க இடம் கொடுத்தால் நமது நிம்மதி போய் விடும்.

சோதிடம் பொய்யா, சோதிடர் பொய்யா

சோதிடம் பொய்யல்ல. முழுநிலவு நாளில் மன நோயாளிகளின் மன நிலை பாதிக்கப்படுவதிலிருந்து கோள்களுக்கும் நம் மனதுக்கும் தொடர்பு இருப்பதை அறிகிறோம். வாழ்க்கையின் பிற விஷயங்களும் இவ்வாறே பிற கோள்களால் பாதிக்கப்படுவது சாத்தியமே.

இதில் ஏதோ அறிவு பூர்வமானது இருக்கிறது என்பதை அறிந்து தான் கிரேக்கத்திலிருந்து வந்த இதை நம் முன்னோர்கள் ஆழ்ந்து கற்றனர், ஆராய்ச்சி செய்தனர். தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை நூல்களாக எழுதி வைத்தனர். இந்நூல்கள் அவர்களது தற்காலிகக் கற்பிதக் கொள்கையே (hypotheses) அன்றி முடிந்த முடிவுகள் அல்ல. அதனால் தான் இந்த நூல்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை ஒத்துப் போகும் இடங்களில் கூட அந்த முடிவுகள் இன்று அனைவருக்கும் பொருந்துவதாக இல்லை. எனவே முன்னோர்களின் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தவேண்டியது இன்றைய சோதிட மாணவர்களின் பொறுப்பு.

இன்று சோதிடம் பிழைப்புக்கான ஒரு தொழிலாக இருக்கிறதே அன்றி அதில் உண்மையான ஆராய்ச்சி நடப்பதாகத் தெரியவில்லை. பல்கலைக் கழகங்களில் சோதிடத்தில் முனைவர் பட்டம் வாங்குபவர்கள் கூட அறிவியல் விதிகள் போன்று அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய எந்த ஒரு உண்மையையும் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை.

வளரும் நிலையில் உள்ள இந்த சோதிட விஞ்ஞானத்தில் இது வரை ஆராய்ச்சியாளர்கள் அறிவில் தோன்றிய கற்பிதக் கொள்கைகளை முடிந்த முடிவாக ஏற்று அதை நம்பி வாழ்க்கையை நடத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.

சோதிடம் அரைகுறையாக ஆராயப்பட்ட நிலையில் இரு்ந்தாலும் சோதிடரால் சமூகத்துக்கு ஒரு நன்மையும் உண்டு. துன்பங்களில் சிக்கி உழலும் மனிதனுக்கு உங்கள் துன்பத்துக்கு கோள்கள் தாம் காரணம். அவை இடம் நகர்ந்துவிட்டால் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லும்போது அவனுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி நம்பிக்கை உற்சாகம் பிறக்கிறது. அவ்வகையில் சோதிடர்கள் மன நல ஆலோசகர்களாகச் செயல்படுகிறார்கள்.

எனவே சோதிடமும் பொய்யல்ல. சோதிடர்களும் பொய்யல்ல. ஆயினும் துன்பங்களை எதிர்கொள்ளச் சிறந்த வழி நம் மனத்தை வலுப்படுத்திக் கொள்வது தான். எனவே பாரதி கூறியபடி, சோதிடத்தை இகழ்ந்து 'எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும்' என்ற நம்பிக்கையுடன் இறைவனைச் சரணடைவது ஒன்று தான் நம் மனத்துக்கு வலிமை தந்து எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறனைத் தரும் என்பது என் கருத்து.