Pages

Sunday, January 15, 2012

செய்க தவம்




      எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம். எய்த விரும்பியதை எய்தப் பாரதி ஒரு வழி காட்டுகிறார்.

செய்க தவம் செய்க தவம் நெஞ்சே, தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்

            தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம். துருவன், பகீரதன், அர்ஜுனன் முதலானோர் தவம் செய்து விரும்பியதை அடைந்தனர். அவர்களைப் போல நாமும் கானகம் சென்று கனி கிழங்குகளைப் புசித்து நீரிடையேயும் நெருப்பிடையேயும் ஒற்றைக் காலில் நின்று இரவு பகல் விடாது இறைவன் பெயரை உச்சரிக்க வேண்டுமா? (தவம் என்றால் இப்படித் தான் என்று கேட்டு வந்திருக்கிறோம்.) அப்படிச் செய்வதற்கு வேண்டிய மனத் திண்மை நம்மிடம் இல்லை.

      அஞ்ச வேண்டாம். பாரதி கூறுவது மிக எளிமையான தவம். அது தான் அன்பு செய்வது. வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறார் அவர். இது எளிமையானது மட்டுமல்ல, முனிவரின் தவத்தை விட மேம்பட்டதும் ஆகும்.

துறந்தார் பெருமை பெரிது அதனினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து குலமகளும்
அறந் தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடும் தொண்டர் செயும் தவமே.

      எளியோரைக் காத்து உணவளிப்பது, நல்லோர் வாழ்க என இறைவனிடம் வேண்டுவது - இவை, இல்லறம் துறந்து கானகம் சென்று முனிவர் செய்யும் தவத்தை விட மேம்பட்டது ஆகும் என்கிறார் பாரதி.

      மிக எளிதான வழியாக இருக்கிறதே, எல்லோரும் இவ்வாறு அன்பு செய்வதன் மூலம் எய்த விரும்பியதை எய்தி விடலாமே. இதில் மற்றொரு பலனும் உண்டு. உணவுக்காக அரும்பாடுபட்டு அல்லல் பட்டு உழைக்கிறோமே, அது இனிமேல் தேவை இல்லை. உழைக்காமலேயே உணவு கிடைக்கும் என்று பாரதி கூறுகிறார். 

மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள்
வகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே
யானெதற்கும் அஞ்சுகிலேன் மானிடரே நீவிர்
என் மதத்தைக் கைக்கொண்மின், பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும்
உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

      அன்பு செய்து கொண்டிருந்தால் போதும். உழ வேண்டாம், விதை போட வேண்டாம், எல்லாப் பயிர் வகைகளும் செழித்து ஓங்கும்.
     
     பாரதி ஏதோ மயக்கத்தில் உளறுவதாக நினைத்தோம் என்றால்,
வள்ளுவரும் இதையே கூறுகிறார். விருந்தோம்பி விட்டு மீதி இருப்பதைப் புசிப்பவன் தன் நிலத்திற்கு விதையே போட வேண்டாம், விளைந்து விடும் என்கிறார். விவிலியமும் ஏசுநாதர் கூற்றாக இதைக் கூறுகிறது-
     
      என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்.

      ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள், அவைகள் விதைக்கிறதும் இல்லை, அறுக்கிறதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதும் இல்லை. அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்.

      இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார். முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கும் கூடக் கொடுக்கப்படும்.

      கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் உழைக்காமல் தேவனுடைய நீதியைத் தேடி அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு கிடைக்கும் என்று நம்புவதற்கு நம்முடைய அனுபவமும் பகுத்தறிவும் இடையூறாக உள்ளனவே?

      ஏசுநாதர், வள்ளுவர், பாரதி கூறியபடி உழைக்காமல் அன்பு செய்து கொண்டிருந்தால் சில பயிர்கள் வேண்டுமானால் வளரலாம். ஆடைகள், வீடுகள் தானாகவே முளைக்குமா?

      விளக்கம் கேட்டு மீண்டும் பாரதியிடமே போவோம். அன்பே தவம் என்று சொன்ன பாரதி வேறோரிடத்தில் தவமே யோகம், யோகமே தவம் என்கிறார். அதாவது அன்பு, தவம், யோகம் இவை ஒரு பொருள் சொற்கள். யோகத்தை விளக்குகிறார்
     
      ஊருக்கு உழைத்தல் யோகம்.

      பாரதி குறிப்பிடும் தவம் என்பதும் அன்பு செய்தல் என்பதும்  ஊருக்கு உழைத்தலைத் தான் குறிக்கிறது என்பதை அறிகிறோம்.  
      பாரதியால் பெரிதும் போற்றப்பட்ட பகவத்கீதையின் இந்தக் கருத்தைக் கவனியுங்கள்.
      யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். எவர் தமக்காகச் சமைக்கிறார்களோ அவர்கள் பாபத்தை உண்கின்றனர்.

      இங்கு யாகம் எனப்படுவது பிறர் நன்மைக்காகச் செய்யப்படும செயல்களைக் குறிக்கிறது. எனவே உழைக்கத் தான் வேண்டும், ஆனால் தனக்காக அல்ல, பிறருக்காக என்பதே பாரதியின் கொள்கை என்பதை அறிகிறோம். ஊருக்காக உழைத்தால் அது உழைப்பாகத் தோன்றாது, உடலை வருத்தாது. தன்னலமின்றிப் பொதுப்பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே இதை உணர முடியும்
இது தொடர்பாக வினோபா கூறுகிறார் தாய் குழந்தைக்கு வேண்டிய போஷணையைச் செய்கிறாள். நான் என்ன செய்து விட்டேன், ஒன்றுமே செய்யவில்லையே, எனக்கு இது ஒரு பாரமா என்று அவள் கேட்கிறாள். மனிதன் இதய பூர்வமாய்க் கர்மம் செய்கையில் வேதனை, கஷ்டம், ஆயாசம் போன்ற எதுவுமே இருப்பதில்லை.

      பிறர் நலனுக்காக உழைக்கும்போது உடம்போ மனமோ பாதிக்கப்படுவதில்லை, எனவே அது உழைப்பே அல்ல.

      எனவே அன்பு செய்யுங்கள். சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனக் கருதி எல்லாவற்றிடத்தும் அன்பு செய்யுங்கள்பிறர் நன்மை மட்டும் கருதி உழையுங்கள். உங்கள் வயிற்றுப் பாட்டை இறைவன் கவனித்துக் கொள்வான்ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். அதுவே தவம். தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும் வழியும் அதுவே.

Thursday, January 12, 2012

அம்மையாரின் இசை


 

       இவ்வுலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கிய சமண சாக்கியங்கள் இசை, நடனம் ஆகிய கலைகளில் ஈடுபடுவது மறு உலக வாழ்வுக்குத் தடையாக இருக்கும் எனப் போதித்தன. ஆனால் அம்மையார் அவற்றையே பயன்படுத்தி இறை நெறியைப் போற்றுகிறார். இறைவனை ஆடும் தெய்வமாக உருவகப்படுத்தி, அவருக்கு உறுதுணையாக இசை முழங்குவதையும் குறிப்பிட்டு இக்கலைகளைத் தெய்வத் தன்மை கொண்டதாக ஆக்குகிறார்.

       துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகிய ஏழு சுரங்களைப் பட்டியல் இடுகிறார் அவர். தமிழ் இலக்கியத்தில் இவற்றைக் கூறும் முதல் நூலே இவருடையது தான். மற்றப் பண்டைய நூல்களினின்றும் இவருடைய சுர வரிசை சற்றே மாறுபடுகின்றது. மற்ற நூல்களில் குரல் எனக் காணப்படும் சுரத்துக்குப் பதிலாக அம்மையார் ஓசை என்று கூறுகிறார். மேலும் மற்ற நூல்களில் இந்த ஓசை (குரல்) முதலாவதாக வருகிறது. அம்மையார் கடைசியாக வைக்கிறார். இந்த ஏழு சுரங்களின் கூட்டுறவால் பண் வகைகள் உண்டாகின்றன என்று அவர் கூறுகிறார்.

       இனி அம்மையார் கூறும் வாத்தியங்களைப் பார்ப்போம். சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம், துந்துபி, வீணை முதலான சுர வாத்தியங்களையும் தாளம், மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை ஆகிய தாள வாத்தியங்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

Sunday, January 8, 2012

பொட்டாலஜி



சுலப வழியில் வெற்றி பெற நாட்டில் எத்தனையோ வழிகள் உள்ளன நியூமராலஜி, ஜெம்மாலஜி, நேமாலஜி, வாஸ்தாலஜி என்று பல உள்ளன. அப்படியும் மக்கள் சுகமாக வாழ்வதாகத் தெரியவில்லை. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பழைய ஏட்டுச் சுவடிகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்த இரண்டு அரிய முறைகளை விஞ்ஞான முறையில் செம்மைப் படுத்தி நேயர்களுக்குத் தருகிறோம்.

பொட்டாலஜி (பெண்களுக்கு)

நெற்றியில் அணியும் பொட்டுகள் அழகுக்கு மட்டுமல்ல, அதிருஷ்டத்திற்கும் அவையே காரணம்.  நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையா? உங்கள் கணவர் தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டம் அடைகிறாரா? உங்கள் மகன் 90 சதவீதம் மார்க் வாங்கி தொழிற் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுகிறானா? சந்தேகமில்லாமல் உங்கள் பொட்டு தான் இந்தத் தோல்விகளுக்குக் காரம்.

பொட்டுகளின் நீளம், அகலம், வடிவம், நிறம் இவை தான் ஒருவரது அதிருஷ்டத்தை நிர்ணயிக்கின்றன. உங்கள் ஜாதகம், கைரேகை, முக அமைப்பு இவற்றை வைத்து உங்களுக்குச் சரியான பொட்டு என்பதை நாங்கள் தீர்மானித்துச் சொல்கிறோம். அதைப் பின்பற்றி உரிய பொட்டு ஸ்டிக்கர்களை நீங்கள் அணிந்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றியோ வெற்றி தான். மேலும் விபரம் அறிய ரூ.99.99 மணி ஆர்டர் செய்து கீழ்க்கண்ட விலாசத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
லெட்டராலஜி (ஆண்களுக்கு மட்டும்)

நீங்கள் பேசிய வார்த்தைகள் பிற்காலத்தில் உங்களுக்கு எதிராகவே திருப்பப் படுகின்றனவா? நீங்கள் சொல்லும் பொய்களை வாடிக்கையாளர்கள் / மேலதிகாரிகள்  நம்ப மறுக்கிறார்களா? வாக்கு வாதங்களில்/ வாய்ச் சண்டைகளில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கு உதவி செய்யவே இந்த லெட்டராலஜி. பிரபல ஜெர்மன் மேதை எரிச் பெர்ஹார்ட் அவர்களால் இந்திய ஓலைச் சுவடிகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்து உருவாக்கப்பட்டது.

உங்கள் ஜாதகப்படி (ஜாதகம் இல்லாதவர்களுக்கு பெயர் ராசிப்படி) எந்தெந்த நாளில் நீங்கள் எந்த எழுத்தைப் பேசவேண்டும் என்று நாங்கள் ஒரு பட்டியல் தருவோம். அந்தந்த நாளுக்குரிய அதிருஷ்ட எழுத்தை நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் முன்னாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய உங்கள் அதிருஷ்ட எழுத்து   என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பையனைக் கடைக்கு அனுப்புவதானால், கமணி, கஇங்கே கவா. ககடைக்கு கபோய் கபிளேடு கவாங்கி கவா என்று சொல்ல வேண்டும்.

சரியான எழுத்தைச் சரியானபடி பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் உங்கள் பேச்சு அட்சர லட்சம் பெறும். வியாபாரத்தில், பரிட்சைகளில் திருமணப் பேச்சு  வார்த்தைகளில் எதில் நீங்கள் கலந்து கொண்டாலும் உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. நீங்கள் கவனத்துக்கு உரிய வி..பி. ஆகிவிடுவீர்கள். விவரங்களுக்கு ரூ.99.99 மணி ஆர்டர் செய்யவும்.

மனைவிக்கு பொட்டாலஜி, கணவனுக்கு லெட்டராலஜி இரு முறைகளுக்கும் சேர்த்து ஆலோசனை பெற சலுகைக் கட்டணம் ரூ 150 மட்டுமே.

தொடர்பு கொள்க-
டுபாக்கூர் சித்தர்,
420, ஏய்ச்சான் தெரு,
பித்தாபுரம் அஞ்சல்
குறுக்கு வெற்றி மாவட்டம்.
பின்கோடு 000 000

Saturday, January 7, 2012

அம்மையாரின் ஆலங்காட்டுப் பயணம்



     

கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து கைலைக்குச் சென்றதாகவும் பின் அங்கிருந்து திருவாலங்காடு வந்து முத்தி அடைந்ததாகவும் சேக்கிழார் கூறுகிறார். அவர் கைலைக்குச் சென்றதாகக் கூறுவது ஒரு உபசார வழக்காக இருக்கக் கூடும். ஏனெனில் அம்மையார் கைலையை இறைவனின் இருப்பிடமாகக் கூறவும் இல்லை, கைலையைக் காண வேண்டும் என்று அவர் விரும்பியதற்கான அடையாளங்களும் அவரது பாடல்களில் இல்லை. பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டு வடக்கு முகமாகச் சென்றதைத் தான், கைலை நோக்கிச் சென்றதாகச் சேக்கிழார் கூறியதாகக் கொள்ள வேண்டும்.

அவர் கால் போன போக்கில் அலைந்து, செல்லும் இடங்களில் எல்லாம் இறைவன் புகழை வாய் ஓயாது உரைத்திருப்பார் என்பதை ஊகிக்கலாம். பலர் அவரைப் பேய் எனக் கருதி அஞ்சி ஓடினாலும் அவரைப் போற்றி ஆதரித்தோரும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாகத் தான் அவரது பாடல்கள் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

இறைவன் ஆலமரங்களிடையே நடனமாடுகிறான் என்ற அவரது கருத்து மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றுப் பரவியதால் பல ஊர்கள் ஆலங்காடு என்று பெயரிடப்பட்டன. அத்தகைய இடங்களில் அவர் அதிக நாட்கள் தங்கி இறை வழிபாடு செய்திருப்பார். அங்கு அவரால் தாக்கம் பெற்றுச் சமணம் துறந்து சைவ நெறியை மேற்கொண்டோர் தொகை மிகுதியாக இருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆலங்காடுகள் சைவத்தின் நாற்றங்காலாகப் போற்றத் தக்கன.

இந்தக் கருதுகோளுக்கான ஆதாரம், தலை ஆலங்காடு என்ற ஊர்ப் பெயர் தான். இவ்வூர் திருவாரூருக்கு அருகில் உள்ளது. இது அப்பர் தேவாரம் பெற்ற தலம். இங்கு இறைவன் நடனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்ப் பெயர்களை ஸம்ஸ்கிருதத்தில் மாற்றும்போது நேருக்கு நேராகத் தான் மொழிபெயர்ப்பது வழக்கம். அவ்வகையில் இரு திருவாலங்காடுகளும் வடாரண்யம் என்று கூறப்படுகின்றன. (வட- ஆல், அரண்யம்- காடு) ஆனால் தலையாலங்காடு நர்த்தனபுரி என்று கூறப்படுகிறது. எனவே தலை ஆலங்காடு என்று பெயரிடப்பட்டது இறைவனின் ஆடற்கோலத்தை நினைவு கொண்டே என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. தலை என்ற அடைமொழி இது அம்மையாரின் பாடலை ஒட்டிப் பெயர் பெற்ற முதல் ஊராக இருக்கக் கூடும் என்பதைத் தெரிவிக்கிறது. மற்ற ஆலங்காடுகளிலிருந்து வேறுபடுத்துவதற்காக இது தலை ஆலங்காடு என்று பெயரிடப் பட்டிருக்கலாம்.

அம்மையார் தன் முதல் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் திருவாலங்காடு என்னும் இடத்தைக் குறிப்பிடுகிறார். தேவார ஆசிரியர்களும் பிறரும் ஒரு ஊரை வர்ணிக்கும் போது அந்த ஊரின் சிறப்பு அம்சமாக- அருகிலுள்ள ஆற்றின் பெயர், மலை, கடல், சோலைகள், மாட மாளிகைகள், அந்தணர்கள் மிகுதியாக வாழ்வது- இப்படி ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடுவது வழக்கம். சுடுகாட்டுச் சூழலை வர்ணித்து விட்டு இத்தகைய திருவாலங்காட்டில் எங்கள் அப்பன் ஆடுகிறான் என்று அம்மையார் காட்டும் காட்சிகள் எல்லா ஊர்ச் சுடலைகளுக்கும் பொருந்துவதாக உள்ளன. அவர் எந்தச் சுடலைக்கும் சென்றதில்லை என்பதும் மக்கள் பேசிக் கொள்வதை வைத்துத் தான் அவர் அதை விவரிக்கிறார் என்பதும், ‘நீ இரவில் தீயாடும் இடத்தை எனக்கு ஒரு நாள் காட்டுதியோ என்று கேட்பதிலிருந்து அறியலாம்.
 
மாங்காடு, மாங்குடி, புளியங்குடி, வேலங்குடி, ஆலங்குடி என்று அந்தந்த ஊரில் மிகுதியாக உள்ள மர வகையின் அடிப்படையில் ஊருக்குப் பெயரிடுவது வழக்கம் தான் என்றாலும் ஆலங்காடு எனப் பெயரிடப்பட்ட ஊர்கள் அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அவை மரத்தின் காரணமாகப் பெயரிடப்பட்டிராமல் அம்மையாருடன் தொடர்பு கொண்டமையால் அப்பெயர் பெற்றிருக்கலாம் என்று நினைக்க இடம் ஏற்படுகிறது. நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் ஆலங்காடு என்று பெயர் பெற்ற ஊர்கள் 7 உள்ளன. (ஆதாரம்- தமிழ்நாடு வாக்காளர் பட்டியல். இந்த ஏழுக்கும் நான் நேரில் சென்று வந்தேன்.) அவையாவன-

      ஆலங்காடு 1- அதிராம்பட்டினத்திற்கு மேற்கில் 30 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை சாலை அருகில் உள்ளது. இவ்வூரில் சிவன் கோவில் இல்லை. 5 கி.மீ. தொலைவில் ஆலங்குடி என்னுமிடத்தில் உள்ளது. இது முன்னாட்களில் பாண்டிய நாட்டின் பகுதியாக இருந்திருக்கலாம்.

      ஆலங்காடு 2- முத்துப்பேட்டை- திருத்துறைப்பூண்டி சாலையில் கடற்கரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு அண்மைக் காலத்திய சிவன் கோவில்கள் இரண்டு உள்ளன.

ஆலங்காடு 3- தலையாலங்காடு. நாகப் பட்டினத்திலிருந்து 30 கி.மீ. மேற்கில் திருவாரூர்- கும்பகோணம் சாலையில் உள்ளது. அப்பர் பாடல் பெற்றது.

ஆலங்காடு 4-     தரங்கம்பாடியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் உள்ளது. கோவில் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. முன்னர் அரச ஆதரவு பெற்றிருந்ததாலும், தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப்படுவதாலும் நல்ல நிலையில், அளவிலும் பெரியதாக உள்ள இக்கோவில் திரு என்ற அடைமொழியுடன் கூடியதாக உள்ளது.

      ஆலங்காடு 5- காரைக்கால்- சீர்காழி சாலையில் கருவிழந்தநாதபுரம் அருகில் உள்ளது. அங்கு ஒரு சிவன் கோவில் இருந்தது. இன்று அது பற்றி ஊர் மக்களில் எவரும் அறியவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி என்ற முதியவர் மட்டுமே இவ்வூர் இங்குள்ள சிவன் கோவிலை ஒட்டியே ஆலங்காடு எனப் பெயரிடப்பட்டது என்பதை அறிவித்தார். அவரது உறவினராகிய வேல்முருகன் என்ற இளைஞருக்குச் சொந்தமான கருப்பங் கொல்லையின் நடுவில் ஒரு சிவலிங்க பாணம் மட்டும் உள்ளது. அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் புதையுண்டு இருப்பதாகக் கூறுகிறார்.

ஆலங்காடு 6- சீர்காழி பழையார் பாதையில் உமையாள் பதிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் இறைவன் பெயர் அவுட்டீஸ்வரர் எனச் சொல்லப்படுகிறது. ஆலங்காட்டீஸ்வரர் என்பதன் மருவாக இருக்கலாம்.

      ஆலங்காடு 7- சென்னைக்கு மேற்கில் 60 கி.மீ. தொலைவில் அரக்கோணம் சாலையில் உள்ளது. இதுவும் திரு என்னும் அடைமொழி பெற்றது. அம்மையார் இந்தத் தலத்தில் முத்தி அடைந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்ட அம்மையார் மேற்கண்ட வரிசைப்படியான தலங்கள் வழியாகப் பயணம் செய்து இறுதியாக இங்கு வந்து சேர்ந்ததாகக் கருதலாம்.

      மேற்கண்ட ஏழு ஊர்களில் ஐந்தாவது ஆறாவது நீங்கலாக மற்ற ஐந்தும் வரைபடத்தில் கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது இது அம்மையார் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் என்ற எண்ணம் வலுப்படுத்துகிறது. அந்த இரண்டு மட்டும் ஏன் ஒதுங்கி உள்ளன என்பது தெரியவில்லை.

அம்மையாரின் பயணப் பாதையாக இதைக் கருதுவதில் மேலும் ஒரு தடை உள்ளது. இவற்றில் முதல் ஆறு தலங்களும் சோழ மண்டலக் கடற்கரை அருகில் அமைந்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று அருகாமையில்- ஓரிரு நாள் நடைப் பயணத்துக்கு உட்பட்டதாக- உள்ளன. ஆறாவதாகச் சொல்லப்பட்ட ஆலங்காட்டிற்கும் ஏழாவதாகச் சொல்லப்பட்ட திருவாலங்காட்டிற்கும் இடையே சுமார் 200 கி.மீ. உள்ளது. சோழ மண்டலத்து மக்கள் அம்மையாரை வரவேற்று உபசரித்துத் தங்கள் ஊர்களுக்கு ஆலங்காடு எனப் பெயரிட்டுக் கொண்ட அளவுக்கு வடக்கே உள்ள மக்கள் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். இவ்விடங்கள் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருக்கக் கூடும். பல்லவர்கள் அப்பரால் போதிக்கப்படு முன் சமணர்களாகவே இருந்தனர் என்பது அறிந்த விஷயம். இங்கெல்லாம் சமணம் மிக அதிகமாக வேரூன்றி இருக்கக் கூடும்.   

இந்தச் சோழநாட்டுத் திருவாலங்காட்டுக்கும் பல்லவ நாட்டு திருவாலங்காட்டுக்கும் இடையில் அமைந்துள்ள தில்லை தான் ஆடற்பெருமானின் தலைநகரமாக அம்மையாருக்குப் பின் விளங்கியது.